ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் உட்கோட்ட ரயில்வே சிறப்பு தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை செல்லும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலிலின் பொதுப் பெட்டியில் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் இருக்கையில் அமர்ந்து இருந்த 2 பேரை போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்யும் போது அதில் கஞ்சா வைத்துயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் ஒரிசா மாநிலம் பிளாஸ்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகாகுட் என்பவரின் மகன் பூபதிபூசன் மகாகுட் (23) மற்றும் பிஷிகேசன் போய் மகன் கார்த்திக் போய் (20) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடத்தி வந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.